Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சகோதரிகள் காதல் திருமணம் செய்ததால் வாலிபர் தூக்குப்போட்டு சாவு: விரக்தியில் தாயும் தற்கொலை

ஆகஸ்டு 10, 2020 06:39

திருச்சி: சகோதரிகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். மகன் இறந்த விரக்தியில் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது; திருச்சியை அடுத்த மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவாசி கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(60). விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி நீலாவதி(50) இவர்களது மகன்கள் பால்ராஜ்(26 சின்னத்துரை(24) மகள்கள் மீரா(30) கல்பனா(23) மீனா(21). பால்ராஜ் சென்னையில் எலக்ட்ரீசியனாகவும் சின்னதுரை மற்றும் மீனா ஆகியோர் ஒரு நிறுவனத்திலும் வேலை செய்து வந்தனர். மீரா கல்பனா ஆகிய இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கின் காரணமாக சென்னையில் இருந்து பால்ராஜ் தனது சொந்த ஊருக்கு வந்தார். அப்போது முசிறி அருகே பேரூரை சேர்ந்த ஒரு வாலிபரை மீனா காதலிப்பது தெரியவந்தது. உடனே அவர் தனது தங்கை மீனாவை அழைத்து நம் வீட்டில் ஏற்கனவே 2 பெண்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டதே வேதனை அளிக்கிறது.  எனவே உன் காதலை கைவிட்டுவிட்டு நாங்கள் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்துகொள் என்று கூறி கண்டித்துள்ளார்.

ஆனால் தனது காதலை கைவிட மறுத்த மீனா கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி அவர் காதலித்த வாலிபரை திருமணம் செய்து கொண்டார். இதனால் மனமுடைந்த பால்ராஜ் ஊருக்கு அருகே பங்குனி வாய்க்கால் கரையோரத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதைத்தொடர்ந்து அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டது. ஏற்கனவே 3 மகள்களும் தங்கள் பேச்சை கேட்காமல் காதல் திருமணம் செய்து கொண்டதால் வேதனையில் இருந்த நீலாவதி மகன் தற்கொலை செய்து கொண்டதை அறிந்து விரக்தி அடைந்தார்.
இந்தநிலையில் மகனை இழந்த துக்கம் தாளாமல் நீலாவதியும் தனது வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த வாத்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

பின்னர் நீலாவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வாத்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மகன் இறந்த துக்கத்தில் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச்செய்திகள்